தென்காசி | வெள்ளத்தில் சிக்கிய சிறுமியை மீட்ட இளைஞருக்கு எஸ்பி பாராட்டு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 29.12.2022 அன்று தனதுகுடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது, அவரது மகளான 4 வயது சிறுமி தடாகத்தில் உள்ள துளை வழியாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துள்ளார்.

அப்போது விளாத்திகுளம் வேம்பார் சாலை பகுதியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான செல்வராஜ் மகன் விஜயகுமார் (24) விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று சிறுமியை காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்,

மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி வெகுமதி வழங்கி பாராட்டினார். இளைஞர் விஜயகுமாரை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஏற்கெனவே நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE