“ஆசிரியர்களை ஊதியத்திற்காக வருந்த வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடலா?'' - தினகரன்

By நாகூர் ரூமி

சென்னை: “அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது” என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சம வேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது. ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல.

இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற மாணவச் செல்வங்களை உருவாக்கும் ஆசிரியர்களை ஊதியத்திற்காக இப்படி வருந்த வைப்பதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா?'' என்று தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE