12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக: வேல்முருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: “12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க; ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று, தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என்ற முறையில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், ரூ.5000 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 10,000 ஊதியமாக பெற்று வருகின்றனர். வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம். ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான், அவர்கள், பகுதிநேர ஆசிரியர்களாக இப்பணியில் சேர்ந்தனர்.

ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அதிகபட்சமாகவே ரூ.5000 மட்டும் தான் ஊதியம் கிடைத்தது. அதுதவிர, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றினாலும், தங்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடந்த 2017 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்த போதும், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றுபோனது. இது தொடர்பாக, தங்களை பணி நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு கோரியும், பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

எனவே, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பகுதி நேர ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக, ஊதிய உயர்வு வழங்கு வேண்டும். எதிர் வரும் தமிழர் திருநாளான, தை திருநாளையொட்டி பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE