அதிமுகவில் இணையும் தவறை என்றைக்கும் செய்யமாட்டேன்: தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: "அதிமுகவை மீட்டெடுக்கும் இலக்கை அடையும் அடையும் நாங்கள் போராடுவோம்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னைய ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "அதிமுக இன்று தவறானவர்கள் கைகளில் இருக்கிறது. எனவேதான், அமமுகவை ஆரம்பித்த அன்றே சொன்னேன், அதிமுக பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியாரின் கைககளில் எம்ஜிஆரின் கட்சியும், சின்னமும் உள்ளது என்று கூறினேன்.

அதை மீட்டெடுப்பதற்காகத்தான், லட்சக்கணக்கான தொண்டர்கள் என்னை தளபதியாக நியமித்து அமமுகவின் பொதுச் செயலாளராக நியமித்து செயல்பட வைத்துள்ளனர். இந்த இலக்கை அடையும் வரை போராடுவோம். காரணம், தேர்தல் பின்னடைவு ஏற்படுவதால் எங்களால் அதை அடைய முடியவில்லை. ஆனால், எங்களது இலக்கில் இருந்து என்றைக்கும் நாங்கள் விலக மாட்டோம்.

நான் அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தத் தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணிக்குச் செல்வீர்களா? என்று கேட்கப்படுகிறது. கூட்டணி என்பது, தேர்தல் நேரத்தில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதால் எங்களுடைய பலமும், எங்களுடைய உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேரைப் போன்று, ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத் திமிரில், எங்களுடைய நடவடிக்கை இருக்காது.

அமமுக வளர்ந்து வருகின்ற ஒரு இயக்கம். வரும்காலத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிச்சயம் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்களின் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சியை, கொள்கைகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரப்புவதற்காக உருவான இயக்கம் இது. எங்கள் இலக்கை அடையும்வரை நாங்கள் ஓயமாட்டோம். அதை ஜனநாயக ரீதியில் நாங்கள் மீட்டெடுப்போம்” என்றார் தினகரன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE