புதுச்சேரி: புதுச்சேரி வணிகத் திருவிழாவில் மொத்தம் ரூ.2.5 கோடிக்கு பரிசுகள் தரப்படவுள்ளது. பம்பர் பரிசாக ஒருவருக்கு 75 சவரன் தங்க நாணயம் தரப்படுகிறது.
வணிகத் திருவிழாவின் முதலாவது உயர்மட்டக்குழு கூட்டம் இன்று புதுச்சேரி வர்த்தக சபையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் கூடியது. இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சுற்றுலாத் துறைச் செயலர் குமார், இயக்குநர் பிரியதர்ஷினி, வர்த்தக சபை தலைவர் குணசேகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக சுற்றுலாத் துறை இயக்குநர் பிரியதர்ஷினி கூறியது: ''வணிகத் திருவிழாவை வரும் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடத்த உள்ளோம். விழாவின் செலவுக்காக அரசின் பங்களிப்பாக ரூ.60 லட்சம் தரப்படும் பரிசுத் தொகைகள் நிர்ணயிக்கப்பட்டன. பம்பர் பரிசாக ஒருவருக்கு 75 சவரன் தங்க நாணயம் தரப்படும். முதல் பரிசாக ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 20 கார்கள் தரப்படும்.
இரண்டாம் பரிசாக ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 40 ஸ்கூட்டர்கள் தரப்படும். மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 200 மொபைல் போன்கள், நான்காம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் சமையலறை பொருட்கள், ஆறுதல் பரிசாக ரூ.1000 மதிப்புள்ள 20 ஆயிரம் பொருட்கள் தரப்படும். மொத்தம் ரூ. 2.5 கோடிக்கு பரிசுகள் தரப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.