ரேஷன் கடைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனையாளர் பதவிகளை நிரப்பக் கோரி வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழுந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியுடையோர் ஏராளமாக உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த தேர்வு நடைமுறையும் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் தெரிவித்த போது, 5 லட்சம் ரூபாய் கொடுத்து இப்பணியை பெற்றதாக அனிதா தெரிவித்துள்ளார். எனது புகாருக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அனிதா என்ற பெயரில் எந்த விற்பனையாளரும் பணியாற்றவில்லை என கூறியுள்ளனர்.

எனவே, நியாய விலைக் கடைகளில் விற்பனையாளர்களை, முறையான தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க உத்தரவிட வேண்டும். அனிதாவை பணியில் இருந்து நீக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE