நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்: 1,00,008 வடை மாலை அலங்காரம்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகமும் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறு வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கோலகலமாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை 1,00,008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணி முதல் நல்லெண்ணெய், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 1 மணிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

முன்னதாக அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலைப தவிர்க்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டருந்து. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாமக்கல் நகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE