தஞ்சாவூர்: ‘இந்து தமிழ் திசை - ஆனந்த ஜோதி’மற்றும் ‘சைக்கிள் பிராண்ட்’ அகர்பத்தி சார்பில் தஞ்சாவூர் அருகே திருக்கண்டியூர் மங்களாம்பிகை சமேத பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோயிலில் ‘வாழ்வை வளமாக்கும்’ திருவிளக்கு பூஜை நேற்று மாலைநடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
உலக நன்மைக்காகவும், வாழ்வை வளமாக்கும் வகையிலும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ சார்பில் பிரசித்தி பெற்ற கோயில்களில் செவ்வாய் கிழமைதோறும் திருவிளக்கு பூஜை நடத்தப்பட உள்ளது. அதன்படி, முதல் நிகழ்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் மங்களாம்பிகை சமேத பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், கண்டியூர், திருவையாறு, அம்மன்பேட்டை, நடுக்கடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400 பெண்கள் கலந்து கொண்டனர்.
கடவுளுக்கு ஒரு கடிதம்: அவர்கள் ‘கடவுளுக்கு ஒரு கடிதம்’ என்ற தலைப்பில் தங்களது பிரார்த்தனைகளை எழுதிக் கொடுத்தனர். அவற்றை கோயில் குருக்கள் விக்னேஷ், பாலாஜி ஆகியோர் மங்களாம்பிகை அம்மன் முன் வைத்து பூஜை செய்தனர். கண்டியூரைச் சேர்ந்த பிரமுகர்கள் எஸ்.ராஜேந்திரன், மாணிக்கம், கோயில் கணக்கர் பஞ்சநாதன், கோயில் முன்னாள் செயல் அலுவலர் கோவிந்தராஜூ, சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியின் ஏரியா சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் சரவணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர்.டி.லதா, ‘இந்து தமிழ்’ நாளிதழ் முகவர்கள் செந்தில்குமார், சங்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
பூஜைக்கு வந்த பெண்கள் குத்துவிளக்கு எடுத்து வந்தனர். சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனத்தின் சார்பில் எண்ணெய், தீப்பெட்டி, திரி, ஊதுபத்தி, சூடம், நைவேத்தியம் ஆகியவை வழங்கப்பட்டன. பூஜை சுமார்ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘இந்து தமிழ்- ஆனந்த ஜோதி’யின் திருவிளக்கு பூஜை ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி, விற்பனை மேலாளர் ஜெயசீலன், தஞ்சாவூர் பிரதிநிதி விஜயபெருமாள், கோயில்செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
டிச.27-க்கு பதிவு செய்யலாம்: அடுத்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளசாமுண்டீஸ்வரி கோயில் எனப்படும் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் டிச.27-ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/01636 என்ற லிங்கிலும், 99406 99401 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பதிவு செய்து கொள்ளலாம்.