ஓபிஎஸ் ஏற்பாட்டில் டிச. 21-ல் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். இரட்டை தலைமைதான் இருக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இருவருக்குமிடையில் பலகட்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.

பின்னர் கடந்த ஜூலை மாதம் பொதுக்குழுவை கூட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

அந்த பொதுக்குழு செல்லாது என உத்தரவிடக் கோரி பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையில், மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை பன்னீர்செல்வம் தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கட்சி அடிப்படையிலான 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளை நியமிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் நியமனம் முடிந்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் “அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் தரப்பில் கூட்டப்படும் இந்த கூட்டத்தில், 88 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். பழனிசாமி நடத்திய பொதுக்குழுவை உயர் நீதிமன்ற அமர்வு அங்கீகரித்த நிலையில், தனது தரப்பிலும் போட்டி பொதுக்குழுவை நடத்தி, அதன் மூலம், கட்சிக்கு ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கட்சி செயல்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி, சட்ட ரீதியாக பழனிசாமியை எதிர்கொள்ள பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம், போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE