சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், சில கடலோர மாவட்டங்களில் வரும் 20, 21-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரக்கூடும். மேலும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றிலும் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 20-ம் தேதிகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
21-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.