சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை.
20 மற்றும் 21ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 20 மற்றும் 21ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.