வரும் ஆண்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் - லியோனி தகவல்

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: ‘அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது போல், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகங்கள் வழங்குவது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்’ என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தெரிவித்தார்.

சிவகாசி தனியார் ஓட்டலில் பாடநுால் அச்சிடுவோர் நலச்சங்கம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு பாடநுால் கழகம் தலைவர் லியோனி தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஐ.லியோனி, "திமுக ஆட்சியில் பாடநூல் கழக தலைவர் பதவி முதல் முறையாக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடப்புத்தக பிரிண்டிங் தமிழக அச்சகத்தினரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என நானும் கல்வி அமைச்சரும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம். அதன்பின் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தன.

அப்போது 70 சதவீதம் தமிழ்நாடு பிரிண்டர்ஸ்க்கும், 30 சதவீதம் ஆந்திரா, கர்நாடக மாநிலத்திற்கு வழங்கலாம் என முதல்வர் தெரிவித்தார். நான் அதற்கு முதல்வரிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்.
அதன்பின் 92 சதவீதம் தமிழ்நாடு பிரிண்டர்ஸ்க்கும், 8 சதவீதம் ஆந்திர பிரிண்டர்ஸ்க்கு ஒதுக்க முதல்வர் வாய்மொழியாக உத்தரவிட்டார். வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் அச்சகம் இருந்தால் மட்டுமே பாடநூல் கழக ஆர்டர் வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். 3 ஆண்டுகளாக அச்சு கூலியில் மாற்றம் இல்லாமல் புத்தக பணி நடக்கிறது.

அச்சக உரிமையாளர்கள் விலைவாசி உயர்வால் 30 சதவீத கூலி உயர்வு கேட்டுள்ளீர்கள். 20 முதல் 25 சதவீத கூலி உயர்வுக்கு தேவையான நடவடடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும். கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் ஏற்பட்ட கூடுதல் பயண செலவை தருவதற்கு பாடநூல் கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தமிழகம் வந்த போது ‘தமிழக புத்தகங்கள் உலக தரத்தில் அச்சடிக்கப்பட்டு உள்ளதாக பாராட்டினார். இதே போன்று டெல்லியிலும் அடிக்கப்படும் என்றார்.

இதுபோன்ற தரமான புத்தகங்கள் சிவகாசியில் தான் அச்சடிக்க முடியும் என்று நான் கூறினேன். வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவச புத்தகம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கத்தை விட அதிக ஆர்டர்கள் அச்சகங்களுக்கு வரும்" என்றார். முன்னதாக, கூட்டத்தில் சிவகாசி எம்எல்ஏ அசோகன், சங்க தலைவர் குமரேசன், தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் செயலாளர் ஜெய்சங்கர், அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதே கூட்டத்தில் தமிழ்நாடு பாடநுால் கழகத்திடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE