கணவரை கண்டுபிடிக்க கோரிய மனைவிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

By கி.மகாராஜன்

மதுரை: காணாமல் போன கணவர் வீடு திரும்பிய நிலையில் அவரை கண்டுபிடிக்கக்கோரிய மனுவை திரும்ப பெறாத மனைவிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வெள்ளியம்குன்றத்தைச் சேர்ந்த உஷா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் செளடி. நாங்கள் மதுரை புதூரில் வாடகை கட்டிடத்தில் ஓட்டல் நடத்தி வந்தோம். ஓட்டலை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் எங்களை மிரட்டினார்.

இது தொடர்பாக என் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக நவ.28-ல் காவல் நிலையம் சென்ற என் கணவர் வீடு திரும்பவில்லை. கணவரை கண்டபிடித்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் கணவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். அங்கிருந்து கணவரை மனுதாரர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் கணவரை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில் மனுவை திரும்ப பெறாமல் இருந்துள்ளார். இதனால் மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE