ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் 100 நாள் நிறைவு: மாவட்டம்தோறும் கொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைவதையொட்டி, மாவட்டம்தோறும் கொண்டாடு மாறு கட்சி நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

மக்களை ஒன்றுபடுத்துவதற் காக இந்திய ஒற்றுமை பயணத் தைக் கடந்த செப். 7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.

விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் மகாத்மா காந்தியுடன் ஜவஹர்லால் நேரு நடைபயணம் மேற்கொண்டார். அதேபோல, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, பண்டித நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல்காந்தியோடு நடைபயணம் மேற்கொண்டது இந்திய தேசிய வரலாற்றை நினைவுபடுத்துவதாக இருந்தது.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100-வது நாள் நிகழ்வு இன்று (டிச.16) ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்திலுள்ள கட்சி அளவிலான அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வுகளின் மூலம் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்ப வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE