சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 64 லட்சத்தில் 636 சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாநகராட்சிபள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில்தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளிகளில் புதிய கட்டிடங்கள், வள வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், நவீன மேசைகள் போன்றஉட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும், முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு வண்ண சீருடைகள், மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விஊக்கத்தொகை போன்ற நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
159 பள்ளி வளாகங்களில்.. இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நிர்பயா நிதியின் கீழ், மாநகராட்சியின் 29 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 90 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 3 தொடக்கப் பள்ளிகள் என 159 பள்ளி வளாகங்களில் ரூ.4 கோடியே 64 லட்சம் செலவில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.