சென்னை: வாரிசு இருப்பதால், திறமை இருப்பதால் அரசியலுக்கு வருகிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி அமைச்சராவது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியான நேரத்தில் இருந்து உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "தகுதியும் திறமையும் வாய்ந்த நபர் உதயநிதி ஸ்டாலின். எப்படி முன்னாள் முதல்வர் கருணாநிதி உழைப்பு உழைப்பு என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டாரோ, அதேபோல் உழைப்பு உழைப்பு என்று சொன்னால் அது உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிடுகிற வரையில் சிறப்போடு பணியாற்றுவார்" என்று குறிப்பிட்டார்.
வாரிசு அரசியல் என்ற விமர்சனம் தொடர்பாக பேசிய சேகர்பாபு, "வாரிசு இருப்பதால், திறமை இருப்பதால் அரசியலுக்கு வருகிறோம். பலர் தங்கள் வாரிசுகளை அரசியலில் திணிக்க முயன்று தோல்வியுற்றுள்ளனர். திறமை இருப்பவர்களே அரசியலில் முடிசூட்டி கொள்வார்கள்" என்று பதிலளித்துள்ளார்.