திருச்சி | விபத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியை மீட்ட மாவட்ட ஆட்சியர்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியை மீட்ட மாவட்ட ஆட்சியர் அவரது வாகனத்தில் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்த்துள்ளார். தக்க சமயத்தில் உதவிய ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. வழக்கம்போல் மண்ணச்சநல்லூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். மண்ணச்சநல்லூர் - துறையூர் சாலையில் உள்ள வடக்குப்பட்டி அருகே வந்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் விஜயலட்சுமி காயமடைந்தார்.

இதைக் கண்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் உப்பிலியபுரம் பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்த வழியாக வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உடனடியாக தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை தனது காரில் ஏற்றிச் சென்று மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் காயமடைந்த தலைமையாசிரியைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்சியரின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE