முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்வு: 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து கேரளாவுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136.5 அடியாக இருந்தது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 3-ம் தேதி 140 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்பு மழையின் தீவிரம் குறைந்தாலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையினால் சீரான நீர்வரத்து இருந்தது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகப் பகுதிக்கு 4 ராட்சத குழாய்கள் வழியே விநாடிக்கு 1,600 கனஅடியும், இரைச்சல் பாலம் வழியே 1,000 கனஅடி என அதிகபட்சம் 2,600 கனஅடிநீர் திறக்க முடியும். அவசர தருணங்களில் அதிகபட்ச நீரை கேரளப்பகுதி வழியேதான் திறக்க முடியும் என்பதால் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கேரளாவில் உள்ள வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மாவட்டம் செய்து வருகிறது” என்றனர்.

இதனிடையே, அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இரண்டாம் போக சாகுபடிக்காக நாற்றாங்கால் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE