அலோபதி மருத்துவர்கள் போல் சித்த மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு - உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: அலோபதி மருத்துவர்கள் போல் சித்த மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த புகழேந்தி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக சுகாதார துறையின்கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களைப் போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார். இவரைப்போல மேலும் பலர் இதேகோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர்கள் சித்த மருத்துவப்பிரிவு அரசு டாக்டர்கள்தான். அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அந்த வகையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.

எனவே டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரர்களுக்கு பொருந்தாது. என்றாலும், இவர்களும் பலன் அடையும் வகையில் உரிய செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதனால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பங்கேற்குமாறு மனுதாரர்களையும் அழைக்கலாம். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சித்த மருத்துவ டாக்டர்கள் பயன்பெறும் வகையில் உரிய செயல்திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE