மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் தந்தை மகன் ஜெயராஜ், பெனிக்ஸ். இவர்கள் கடந்த கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரை சிபிஜ கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து கொலை வழக்கில் நான்காவது எதிரியாக இருக்கும் தலைமை காவலர் முருகன் தரப்பில் வாதிடும் போது, ஜெயராஜ், பெனிக்ஸை கொன்றதில் ஏற்கனவே இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து சென்றுள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் நேரடி தொடர்பு உள்ளது. அவரையும் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.
பின்னர் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.