சேலம் தொகுதிக்கு புதிய சாலைகள்: நிதின் கட்கரியிடம் பார்த்திபன் எம்.பி கோரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தனது மக்களவைத் தொகுதியான சேலத்தில் புதிய சாலைகள் அமைக்கக் கோரி, மத்திய தரைவழிப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் மனு அளித்தார்.

இதுதொடர்பான தனது மனுவில் சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறியுள்ளது: சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள இருவழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றுவதற்கு சமீபத்தில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஆத்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதால் ஏற்படும் தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க, செல்லியம்பாளையம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

எனது தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள எம்.வி.ஆர் இன்ஃப்ரா டோல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனது சேலம் தொகுதி மக்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE