“சங்கிகளின் ஊளைகள்... நவீன மனுதர்மம்...” - உதயநிதி மீதான விமர்சனங்களுக்கு டிஆர்பி ராஜா, ராஜீவ் காந்தி பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: “உதயநிதி அமைச்சர் ஆவது தொடர்பான விமர்சனங்களுக்கு, அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன” என்று டிஆர்பி ராஜாவும், “இது நவீன மனுதர்மம்” என்று ராஜீவ் காந்தியும் பதில் அளித்துள்ளனர்.

திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (டிச.13) அமைச்சராக பொறுப்பு ஏற்கவுள்ளார். இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. இதற்கு திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா மற்றும் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.

டிஆர்பி. ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவில், "இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் முதல்வர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். வழக்கம் போல அரசியல் நரிகளான அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன. அவர்கள் அப்படித்தான்.

நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அவரது திறமை மிகுந்த செயல்பாடுகளைத்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரியக்கத்தின் இளைஞரணியைத் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுபவர், அமைச்சராகும்போது அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவது இயல்பு. விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள். அவர்கள், friendly approach உடன் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு எப்போதும் down-to-earth ஆக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அவர்களின் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து, உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிகப் பொருத்தமானவர்.

முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை வரலாறு காணாத வகையில் மேம்படுத்தி இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதனைகள் படைத்து, பதக்கங்களை வெல்லும் வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதில் புதிய முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட் அதற்கொரு simple sample. அதிலும் உதயநிதி ஸ்டாலின் பங்கு முக்கியமானது.

தொகுதிகள் தோறும் நவீன விளையாட்டரங்கம், சென்னைக்கு அருகே சர்வதேச தரத்திலான விளையாட்டு கிராமம், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் என விளையாட்டுத்து துறையை அணுஅணுவாக கவனித்து வளர்த்து வருகிறார் முதல்வர்.

அவருக்கு உற்றதுணையாக உதயநிதி ஸ்டாலினைத் தந்திருக்கிறது கழகம். இது விளையாட்டுத் துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறை மேம்பட்டால் இளைஞர்களின் திறமை மேம்படும்.வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநிலத்தின் திறனால் நாட்டிற்கே பெருமை சேரும். அதை நோக்கிய பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாராகிறது.விமர்சனங்கள் நொறுங்கும். சாதனைகள் பெருகும். இளைஞர்களே இது உங்களுக்கான ஆட்சி. காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

மேலும், மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் என்று அரசர்களை தங்களின் பெருமை, அடையாளம் என கொண்டாடும் இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை வாரிசு என்று வசைபாடி ஒதுக்க நினைப்பது ஒரு வித நவீன மனுதர்மமே! குஜராத் முதவராகும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ கூட இல்லை மோடி! குறுக்கு வழியில் குஜராத் முதல்வராக வந்த மோடியை கொண்டாடுபவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ உதயநிதி அமைச்சராவதை விமர்சனம் செய்வதை பார்த்தா வேடிக்கையா இருக்கு!" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE