“தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது?” - திமுக அரசுக்கு அதிமுக கேள்வி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: "திமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் தமிழர்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கூறினார்கள். ஆனால், அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்தவில்லை" என்று அதிமுக துணைப் பொது செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் இன்று (13-ம் தேதி) அதிமுக சார்பில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கண்டன உரையாற்றினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''மாண்டஸ் புயலால் சென்னையில் 650 டன் மரக்கழிவுகள் அகற்றி உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். ஒரு மரமே 20 முதல் 40 டன் இருக்கும். அப்படி என்றால் எத்தனை மரங்கள் விழுந்திருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள்.

மாண்டஸ் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், திமுக அமைச்சர்கள் ஊடகங்களில் பெரியதாக காட்டிக் கொள்கிறார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் புயல் பாதிப்பில் 3 ஆயிரம் டன் மரக்கழிவுகளை 3 நாட்களில் அகற்றினோம்.

திமுகவில் வாரிசு அரசியல்: திமுகவின் தவறுகளை அதிமுக சுட்டிக்காட்டுகிறது. அதனை, அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். மாறாக முதல்வர் ஸ்டாலின் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, பிதற்றுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என ஆணவத்துடன் கூறி இருக்கிறார். திமுகவில் வாரிசு அரசியல் காலம், காலமாக இருந்து கொண்டிருக்கிறது. எனவே, அவர்களது குடும்பத்தில் இருந்து ஒருவர் அமைச்சராவது என்பது பெரிய விஷயம் இல்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் 75 சதவீத தமிழர்களுக்கே, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கூறினார்கள். ஆனால், அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்தவில்லை. பிற மாநிலங்களில் எல்லாம், அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள். இவ்வாறான நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாடா எலக்டரானிக்ஸ் நிறுவனத்தில் அசாம், உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை என்கிற நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது. இதற்காக போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆன்லைன் சூதாட்ட தடை: சென்னை மாநகராட்சி ஆணையர், காரில் தொங்கியபடி சென்றது கண்டனத்திற்குரியது. தலைமைச் செயலாளர் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், தற்போது சட்டம் - ஒழுங்கு மிக மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போனால் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. இதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. எங்களது கொள்கையை தற்போதைய திமுகு அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைன் சூதாட்ட தடையை நாங்கள் ஆதரிப்போம்” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE