திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள்: ஆளுநர் தமிழிசை கிண்டல்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கன்னியாகுமரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு நெல்லை மாநகர காவல் துறை தரப்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "புயலால் பாதிப்பு வரக்கூடாது என அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. முதலமைச்சர் ரெங்கசாமி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். அதனை நான் தொலைபேசி வாயிலாக கேட்டிருந்தேன். நல்ல முன்னேற்பாடு காரணமாக பல பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது புயலால் பலர் வீடுகளை இழந்துள்ளனர் வாகனங்களை இழந்துள்ளனர் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி. மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.

ஜி20 மாநாட்டிற்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா நாடு முழுவதும் 200 இடங்களில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது தெலங்கானா மாநிலத்தில் ஆறு இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடத்திலும் தமிழகத்தில் நான்கு இடங்களிலும் மாநாடு நடைபெற உள்ளது.

ஜி-20 மாநாட்டின் முக்கிய அம்சமாக உலக பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுத்தால் தான் பூமி அதிக வெப்பமயமாதலை தடுத்து இயற்கைக்கு மாறான மழை போன்றவை தடுக்க முடியும். பிளாஸ்டிக் தடுப்பில் புதுச்சேரி மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கில் குவளைகள் தயார் செய்து புதுச்சேரி ராஜ் நிவாஸில் புழக்கத்தில் வைத்துள்ளோம். மத்திய அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக ராஜி நிவாஸில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கையை பாராட்டி சென்றனர்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்னை கிரண்பேடியோடு ஒப்பிட்டு கூறி வருகிறார். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட நான் விரும்புவதில்லை. ஆளுநர் பணியை மட்டும் தான் செய்கிறேன் அரசியல்வாதியாக செயல்படவில்லை. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது குறித்து தற்போது பதில் அளிக்க முடியாது. தலைமையோடு இணைந்து பணியாற்றியதால் தான் ஆக்கபூர்வமான பணிகள் புதுச்சேரியில் செய்யப்பட்டு வருகிறது. துணைநிலை ஆளுநரான நான் புதுச்சேரி அரசாங்கத்திற்கு மிகவும் துணையாக இருந்து வருகிறேன்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் புதிதாக யானை வாங்குவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முடிவு செய்யப்படும்

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் மற்ற மாநில ஆட்சி குறித்தும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனாலும் உயிரிழப்பு இல்லாமல் காத்திருப்பது அவசியம். அதை எடுத்துரைக்க திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும். மாடல் என்பது தமிழா? அவர்கள் என்ன சொன்னாலும் அது தமிழ் வார்த்தை ஆகிவிடுமா? திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE