சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மேலும், மெரினா கடற்கரைகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது
தற்போது மணிக்கு 14 கி.மீ. தூரத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், வெள்ளிக்கிழமை (நவ.9) இரவுக்கும், சனிக்கிழமை (நவ.10) அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கடந்த சில மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இன்று (நவ.9) காலை முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை, மதியம் முதல் இடைவிடாது பெய்து வருகிறது. கடற்கரைப் பகுதிகளில் காற்று பலமாக வீசி வருகிறது. மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசும் பலத்த காற்று காரணமாக மணல் சாலைகளை மூடி உள்ளன. மாமல்லபுரம் மற்றும் கோவளம் பகுதிகளிலும் காற்று வேகமாக வீசி வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. தற்போது வரை 20-க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.