இன்று மாலை உருவாகிறது புயல் | தமிழகத்திற்கு நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னையில் இருந்து தென் கிழக்கில் 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து நகர்ந்து இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யும். 9 ஆம் தேதி தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும். வட தமிழக பகுதிகளில் அதீத கனமழை பெய்யும். 10 ஆம் தேதி தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும். 11 ஆம் தேதி வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மொத்தத்தில் தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 8 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 9 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 10 ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE