சென்னை: பொது விநியோகத் திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்கள் சுமார் ரூ.300 கோடி வரை வருவாயை மறைத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த நவ.23-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
குறிப்பாக, அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம், பெஸ்ட் டால் மில், காமாட்சி அண்டு கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களின் அலுவலகம், அதிகாரிகளின் வீடுகள், கிடங்குகள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 80 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனை 4 நாட்கள் வரை நீடித்தது.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வருவாயை மறைத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில், போலி ரசீதுகள் வாயிலாகவிற்பனை செய்தது உட்பட பல்வேறு வகைகளில், 5 நிறுவனங்களும் ரூ.300 கோடி வரை வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.