தொழிலதிபர் கடத்தல் விவகாரம்: கவுன்சிலரின் கணவர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தொழிலதிபர் கடத்தல், போலி முன்ஜாமின் ஆவணம் தயாரித்த விவகாரத்தில் திமுகவில் இருந்து கவுன்சிலரின் கணவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அமர்ராம். கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அவரை மிரட்டிய நபர்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு வரச்சொல்லி, காரில் கடத்தி திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாவலூரில் உள்ள அவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.60 லட்சத்துக்கு எழுதி வாங்கியுள்ளனர்.

இது தொடர்பான புகாரில் மெரினா போலீஸார் விசாரணை நடத்தியதில், சென்னை மாநகராட்சி 124-வது வார்டு திமுக கவுன்சிலர் மயிலாப்பூரைச் சேர்ந்த விமலா மற்றும் அவரது கணவர் மயிலாப்பூர் கிழக்கு பகுதி 124-வது திமுக வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தான் தொழிலதிபரை கடத்தி, அவரது சொத்தை எழுதி வாங்கியவர்கள் என தெரியவந்தது.

இருவரும் இந்த வழக்கின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்றனர். எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்த அவர்களின் முன்ஜாமீன் ஆர்டரை மாஜிஸ்திரேட் சரிபார்த்தபோது, முன்ஜாமீன் காலாவதியாகியிருப்பதும், அந்த ஆர்டரைபோல தேதி மாற்றி போலியாக ஒரு ஆர்டரை தயார் செய்திருப்பதும் தெரியவந்தது.

மாஜிஸ்திரேட் உத்தரவின்படி எழும்பூர் போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE