சென்னை: திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உரிய சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (73). சென்னையில் உள்ள வீட்டில் இருந்த அமைச்சர் ராமசந்திரனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதய வால்வுகளில் அடைப்புகளை கண்டறிய ஆஞ்சியோ பரிசோதனை செய்தனர். இதையடுத்து உரிய சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் வீடு திரும்பினார். மேலும், அவரை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.