138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சென்னை: தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் - கங்கை முத்து மாரியம்மன், சங்கராபுரம் - ராஜநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் - சந்திரலிங்கம், கடலூர் மாவட்டம், உடையார்குடி - அனந்தீஸ்வரர், சிவகங்கை மாவட்டம், நரியனேந்தல் - முத்தையாசுவாமி, மானாமதுரை - சங்குபிள்ளையார், கோவை மாவட்டம், கோவில்பாளையம் - விநாயகர், செட்டிப்பாளையம் - காளியம்மன் உள்ளிட்ட 138 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில் திருப்பணிகளுக்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், துறை இணை ஆணையர் அர.சுதர்சன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியார், முனைவர் சிவ ஸ்ரீ.கே.பிச்சை குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE