நாகர்கோவில்: திமுக பொதுக்கூட்டத்தில் மேயர் விடுத்த மிரட்டல் எதிரொலியாக, நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் கழுத்தில் பாதுகாப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.
நாகர்கோவிலில் கடந்த வாரம்நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும் மேயருமான மகேஷ் பேசும்போது, பாஜகவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தி கைதாகினர்.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ்தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த பாஜக கவுன்சிலர்கள் கழுத்தில் பாதுகாப்பு பட்டை அணிந்து வந்தனர். திமுக கூட்டத்தில் பாஜகவினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மேயர் பேசியதால், பாதுகாப்புக்காக கழுத்தில் பட்டை அணிந்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வெளிநடப்பு: பின்னர், “பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் தோண்டப்பட்ட மண்ணை மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் வகையில் பயன்படுத்தவில்லை. ரூ. 20 லட்சத்துக்கு தேசியக் கொடி வாங்கி விற்றதில் முறைகேடு நடந்துள்ளது. இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்” எனக்கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், மாநகராட்சி அலுவலக வாயிலில் மேயரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.