விபத்தில் பொறியியல் மாணவர் உயிரிழப்பு: நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரையை சேர்ந்தவர் ஆகன் ஜெர்மான்ஸ் (21). அவரது நண்பர்கள் தருண் குமார் (21), பிரவீன் குமார் (21). 3 பேரும் முகப்பேரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதி காலை கோவளம் கடற்கரையில் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் சென்றனர்.

அமைந்தகரை மேம்பாலத்தின் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆலன் ஜெர்மான்ஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆலன் ஜெர்மான்ஸ் உயிரிழந்தார். தருண் குமார், பிரவீன் குமார் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த ஜெர்மான்ஸ் சில தினங்களுக்கு முன் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE