சென்னை: “அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கட்சியின் நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், தொண்டர்களும் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதற்கு பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அதிமுகவுக்கு புதிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.
விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன். பிரதமர், அமித் ஷா சந்திப்பின்போது எந்த விதமான அரசியலும் பேசவில்லை. மெகா கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன்” என்று அவர் கூறினார்.