ஏகாம்பரநாதர் கோயில் புதுப்பிப்பு பணியில் முறைகேடு: இணை ஆணையர் கவிதா மீதான வழக்கு ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புதுப்பிப்பு பணிக்காக தமிழக அரசு ரூ. 2 கோடியை ஒதுக்கியது. ஆனால் அப்போது அறநிலையத் துறையின் கோயில் திருப்பணி இணை ஆணையராக பதவி வகித்த கவிதா பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து, அரசு ஒதுக்கிய நிதியிலும் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக டில்லிபாபு என்பவரது புகாரின்பேரில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் உத்தரவுப்படி சிவகாஞ்சி போலீஸார் இணை ஆணையர் கவிதா உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இணை ஆணையர் கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில், “புகார்தாரர் தரப்பில் அளித்துள்ள புகாரை சரிவர ஆய்வு செய்யாமல் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர், அறநிலையத் துறை அதிகாரி கவிதா மீது வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளார்.

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் முன்பாக அரசிடம் முறையான முன்அனுமதி பெற வேண்டும். டில்லிபாபு கோயிலுக்கு சொந்தமான கடையில் உள்வாடகையில் இருந்து வந்துள்ளார். அவரை கடையில் இருந்து வெளியேற்றியதால் உள்நோக்கத்துடன் இந்த புகாரை அளித்துள்ளார். அரசு ஊழியர்கள் தங்களது பணியை பயமின்றி தொடர வேண்டும்.

எனவே அறநிலையத் துறை அதிகாரி கவிதா உள்ளிட்டோருக்கு எதிராக சிவகாஞ்சி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்கிறேன். அதேநேரம் அறநிலையத் துறை செயலர் மற்றும் ஆணையர் ஆகியோர் இணை ஆணையர் கவிதா மீதான குற்றச்சாட்டு குறித்து அவருக்கு மேல்பதவியில் உள்ள 2 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். அதில் குற்றச்சாட்டுக்கு உரிய முகாந்திரம் இருந்தால் கவிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE