ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

By கி.மகாராஜன் 


மதுரை: ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருக்கும் கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களில் தொன்மையானது தருமபுர ஆதீன மடம். இந்த மடத்துக்கு தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவநாதர் கோயில் ஆதீன மடத்துக்கு சொந்தமானது.

இந்தக் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் ஆதீன மடத்துக்கு சொந்தமானது என ஏற்கெனவே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் அந்த நிலம் இன்னும் மீட்கவில்லை. எனவே நிலத்தை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணாபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ''கோயில் நிலங்களை மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். இந்த வழக்கில் கோயில் சொத்தை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE