மதுரை: தமிழகத்தில் பிற ஆசிரியர்களை போல் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மிக மிக குறைவாகும். பிற ஆசிரியர்களை போல் சிறப்பு ஆசிரியர்களுக்கும் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கக்கோரி தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களை போல் ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிடுகையில், "தமிழகத்தில் 250 சிறப்பு பள்ளிகளும், அதில் 500 சிறப்பு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக அறிவுசார் குறைபாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர்" என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள், "சிறப்பு ஆசிரியர்களின் ஊதியம் குறித்து 2016-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
» ஓபிசி பிரிவு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கான நடைமுறைகள் என்ன? சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களை போல் ஊதியம் வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை நவ. 15-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.