ஓபிசி பிரிவு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By கி.மகாராஜன்

மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மேலக்காலை சேர்ந்த தவமணிதேவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 2001-ல் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய சமூக நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் அதுபோல கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் இடஒதுக்கீடு சலுகை வழங்க முடியும்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எஸ்.சி, எஸ்.டி போல் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரேனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது. எனவே, 2021 - மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு போல் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு அளித்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவு அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஓபிசி பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என மத்திய அரசு எதன் அடிப்படையில் தெரிவிக்கிறது. 1951-ல் எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்களின் நலனுக்காக மாற்றி அமைக்கலாமே என்றனர். பின்னர், மத்திய அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ. 22-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE