கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூரில் ஆர்எஸ்எஸ் பேரணி: போலீஸ் பலத்த பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழகம் முழுவதும் அக்.2-ம் தேதி 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவ.6-ம் தேதியன்று நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது. காவல்துறை தரப்பில் 3 இடங்களில் பேரணி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பல இடங்களில் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனக்கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், அருமனை, நாகர்கோயில் உள்ளிட்ட 6 இடங்களை் தவிர 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது.

பேரணி ஒத்திவைப்பு: அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் பொதுவெளியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, நவம்பர் 6-ம் தேதி நடத்த இருந்த ஊர்வலத்தை நடத்த இயலாது எனக்கூறி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்திருந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் இன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்தது. கவரை தெரு, காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, சேலம் பிரதான சாலை, மார்க்கெட் சாலை வழியாக மந்தைவெளி பகுதிகள் வழியே இந்த பேரணி சென்று முடிவடைகிறது. அங்கு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையில் கலந்துகொண்டனர். இப்பகுதியில் 1300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரணி செல்லும் வழகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்துள்ல போலீஸார், தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர்: பெரம்பலூரில் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, வானொலி திடலில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். 3 மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில் 900 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரணி செல்லும் இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கடலூர்: திருப்பாதிரிபுலியூர் மாட வீதியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். 1700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரணியின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் மட்டுமின்றி, பேரணி செல்வோருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் திரண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE