மழை பாதிப்பு | தமிழகத்தில் 29 கால்நடைகள் இறப்பு; 67 வீடுகள் சேதம்: பேரிடர் மேலாண் துறை தகவல் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (நவ.5) பெய்த கனமழையின் காரணமாக 29 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 67 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. மனித உயிரிழப்புகள் எதுவும் பதவாகவில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: நேற்றைய தினம் (நவ.5) தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 4.84 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 22.92 மி.மீ. பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில், 76 மி.மீ கனமழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று (நவ.5) மனித உயிரிழப்பு பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (நவ.5) பெய்த கனமழையின் காரணமாக 29 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 67 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 66 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று (நவ.6) விழுந்த 1 மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 819 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது. 6-ஆம் தேதி, பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.7-ஆம் தேதி மற்றும் 8-ம் தேதிகளில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-ஆம் தேதிஅன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நவ.4-ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

> பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

> இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (37+6 = 43)

> தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

> 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

> இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 417 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 268 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 149 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 217 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்

> இன்று காலை 8 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.89 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 310 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 679 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

> அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.80 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 292 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE