மாநகர, நகர திட்டப் பணிகளுக்கு அனுமதி தரும் அதிகாரியின் நிதி உச்சவரம்பு உயர்வு: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கான நிர்வாக அனுமதி வழங்குவோரின் நிதி உச்சவரம்பை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரின் கீழ் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு ஒவ்வொரு நிலை அதிகாரியும் குறிப்பிட்ட நிதி அளவில்தான் நிர்வாக அனுமதி வழங்க முடியும்.

ஒவ்வோர் ஆண்டும் திட்டத்தின் தோராய மதிப்பு உயர்ந்து வருவதால், திருத்திய திட்ட மதிப்பீடு தயாரித்து மீண்டும்அனுமதி கோரி உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே, நிர்வாக அனுமதி அளிக்கும் அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையர், அரசுக்குகருத்துரு அனுப்பி இருந்தார்.

இதை கவனமாகப் பரிசீலித்த நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர், இந்த நிதிஅளவை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ.1 கோடி வரையிலான திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களும், ரூ.1 கோடிக்கு மேல் ரூ.10 கோடிக்குள் நகராட்சி நிர்வாகஇயக்குநரும், ரூ.100 கோடிக்கு மேல் அரசும் நிர்வாக அனுமதி வழங்கும்.

மாநகராட்சி மேயர்கள் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரையும், மாநகராட்சி ஆணையர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான திட்டப் பணிகளுக்கும் அனுமதி வழங்க முடியும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE