சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (நவ. 4) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் 3-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு இடத்தில் அதி கனமழையும், 7 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 22 செ.மீ., தஞ்சாவூரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 16 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 15 செ.மீ., சேத்தியாத்தோப்பு, கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
» ஆளுநருக்கு சொந்தக் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது - ஆளுநர் தமிழிசை
» மதுரையைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் பரவலாக்கப்படும் காவல் நிலைய கண்காணிப்புத் திட்டம்
தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவ. 4, 5, 6, 7-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 4-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், கன மழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.