கோவை சம்பவம் | “அக்.21-ல் உளவுத் துறை அனுப்பிய கடிதம் என்னிடம் இருக்கிறது” - அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "கோவை சம்பவத்தில் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய காவல் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகள் யாரென்று உடனடியாக கண்டுபிடித்துள்ளனர், சோதனை நடத்தியுள்ளனர், வெடிமருந்துகளை கைபற்றியுள்ளனர். ஆனால், முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் 4 நாட்களாக ஏன் முடிவு எதுவும் எடுக்கவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கோவை சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து, நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாத நிகழ்வுகள் குறித்தும் ஆராயக்கூடியத் தன்மை என்ஐஏவுக்கு மட்டும்தான் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் என்ஐஏவில் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர்.

என்ஐஏ என்பது இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஒரு நிறுவனம். குறிப்பாக, தீவிரவாத செயல்கள் குறித்து விசாரிக்கும் ஒரு நிறுவனம். இதுபோன்ற அதிகாரமிக்க அமைப்பு விசாரிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தமிழக அரசு சம்பவம் நடந்து இருதினங்களுக்குப் பிறகு என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்தனர். உடனடியாக பாஜக அதனை வரவேற்றது.

அடிமட்டத்தில் இருக்கக்கூடிய காவல் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடித்துள்ளனர், சோதனை நடத்தியுள்ளனர், வெடிமருந்துகளை கைபற்றியுள்ளனர். ஆனால், முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் 4 நாட்களாக ஏன் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

கோவை காவல் ஆணையர் கடந்த 18-ம் தேதி எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்று கூறினார். ஆனால், மத்திய உள்துறை 18-ம் தேதி மதியம், தமிழக அரசுக்கு தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், தமிழக காவல் துறை 18, 19 மற்றும் 20-ம் தேதி ஆகிய 3 நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 21-ம் தேதி மாலை மாநிலத்தின் உளவுத் துறை, மத்திய அரசு கொடுத்த அறிக்கையை எடுத்து, அதற்கு மேல் சில விஷயங்களை எழுதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

23-ம் தேதி இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. காவல் துறை டிஜிபி, கோவை மாநகர காவல் ஆணையர் தங்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை வரவில்லை என்கின்றனர். ஆனால், 21-ம் தேதி உளவுத் துறை எழுதி அனுப்பியுள்ள கடிதம் என்னிடம் இருக்கிறது. அது அஃபிஷியல் சீக்ரெட் ஆக்ட் (Officials secrets act). ஒருவேளை எனக்கு சம்மன் அனுப்பினால் நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த லெட்டரை நான் கொடுக்கும்போது முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை கூற வேண்டும். தமிழகத்தின் இறையாண்மை, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக காவல் துறையிடம் இருந்து எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை எனக்கு சம்மன் அனுப்பினால், அந்த எச்சரிக்கை குறித்த கடிதத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

18-ம் தேதி கொடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பின்னர் 4 நாட்களாக ஏன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்புவேன். அதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும். 4 நாட்களாக முடிவெடுக்க வேண்டியவர்கள் ஏன் முடிவெடுக்கவில்லை.

இந்தியாவில் இதுபோல சம்பவங்கள் நடைபெறுகிறது. அப்படி நடந்தால், முதல்வர்கள் எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கின்றனர், அதை தீவிரவாத தாக்குதல் என்று அறிவிக்கின்றனர், உடனடியாக விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்கின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் ஏற்படுகின்ற காலதாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்படக்கூடும். இதைத்தான் ஆளுநர் நேற்று கோவையில் மிகத் தெளிவாக பேசியிருக்கிறார்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE