விருத்தாசலம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராகேஷ் குமாரை சந்தித்து மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் வளரச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் நெய்வேலி சுற்று வட்டார மக்களின் பங்களிப்பு அதிகம். இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்தும், வீடு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நிறுவனத் தலைவரை சந்தித்து ஏற்கெனவே பேசியுள்ளார்.
தற்போது இதை வலியுறுத்தி என்எல்சி இந்தியா தலைவரை சந்தித்து பேசினேன். நிலம் அளித்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருப்தி இல்லாததால் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாகஉயர்த்தி தர கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தில் என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்றார்.