மதுரை: கோயிலுக்குள் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி சங்கர ராமேஸ்வரர் கோயில் மற்றும் வைகுண்டபதி கோயில் உள்ளன. இந்தக் கோயில்கள் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலுக்குள் பூ, பிரசாதம் விற்பனை கடைகள் இதுவரை இருந்ததில்லை. ஆனால் தற்போது பூக்கடை, பிரசாதப் பொருட்கள் விற்பனைக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிரானது.
இந்தக் கடைகளால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். பழமையான சிற்பங்கள் மறைந்து போகும். இதனால் கோயில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ''கோயில் பிரகாரத்தில் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்க முடியாது. சங்கரராமேஸ்வரர் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை கோயிலுக்கு வெளிய அமைப்பது தொடர்பாக கோயில் செயல் அலுவலரிடம் தகவல் பெற்ற நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.