மாணவர்களை ஆபத்தான பயணம் செய்ய வைத்ததாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாணவர் திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற 340 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு, தேவையான மேஜை, நாற்காலிகள் இல்லை. இதனால் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மேஜை, நாற்காலிகள் பெறப் பட்டு பயன்படுத்தப்பட்டதாக கூறப் படுகிறது.

தேர்வுகள் முடிந்த நிலையில்,மேஜை, நாற்காலிகளை சம்மந்தப்பட்டதனியார் பள்ளியிடம் மீண்டும் வழங்குவதற்காக, மேஜை, நாற்காலிகளை டிராக்டரில் ஏற்றிச் சென்றனர். அவைகள் கீழே விழுந்து விடாமல் பிடித்தவாறு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றனர். ஆலம்பூண்டியில் இருந்து சத்தியமங்கலம் வரை சுமார் 5 கி.மீ தூரத்திற்கு டிராக்டரில் மேஜை, நாற்காலிகளை பிடித்தபடி நின்று கொண்டே மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனையடுத்து டிராக்டரில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வைத்த ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உடற்கல்வி ஆசிரியர் பழனி உள்ளிட்ட இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண்ப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்தசம்பவம் தொடர்பாக துறை ரீதியாகவிசாரணை நடத்தவும் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, “டிராக்டரில் இருக்கைகள் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்ட போது, மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல, தன்னிச்சையாக அந்த டிராக்டரில் ஏறி சென்றுள்ளனர்.

யாரும் அப்படிச் செல்லுமாறு அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. இந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தனர். 5 கி.மீ தூரத்திற்கு நின்று கொண்டே மாணவர்கள் பயணம்செய்த வீடியோ வைரலாகியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE