கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து | இறந்தவர்கள் உயிர்களின் மீது இரக்கம் கொண்டவர்கள்: சென்னை தம்பதி குறித்து உதவியாளர் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: உத்தராகண்ட் மாநிலம் கேதார் நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பயங்கர விபத்தில் சென்னையை சேர்ந்த 3 யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் சென்னை முகப்பேர், சாந்தம் காலனி, 9-வது தெருவை சேர்ந்த சுஜாதா (53), அவரது கணவர் பிரேம் குமார் (63) அடங்கும். இவர்களது உறவினர் மயிலாப்பூர் பாலகிருஷ்ணா தெருவைச் சேர்ந்த கலா (50) என்பவரும் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவர்களது உடல்களை சென்னை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற் கொண்டுள்ளனர். இந்நிலையில், விபத்தில் மரணம் அடைந்த சுஜாதா தம்பதி பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் முகப்பேருக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு தனி வீடு கட்டி குடியேறியுள்ளனர். பிரேம் குமார் பிஹாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுக்கு பிறகு குடும்பத்துடன் முகப்பேரில் நிரந்தரமாக தங்கியுள்ளார். அங்கு மனைவி சுஜாதா, அவரது 90 வயதுடைய தாய், தந்தையையும் நன்கு கவனித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு பிரசாந்த் (24), காவியா (28) என்ற இரு பிள்ளைகள். பிரசாந்த் அமெரிக்காவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் துணைத் தலைவராக உள்ளார்.

காவியா கணவருடன் சிங்கப்பூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பெற்றோர் இறந்த தகவல் அறிந்ததும், பிரசாந்த் அவசரமாக தாயகம் திரும்பினார். அவர் தனது பெற்றோர் உடல்களை பெற உறவினர்களுடன் உத்தராகண்ட் மாநிலம் விரைந்துள்ளார். பலியான சென்னையைச் சேர்ந்த 3 பேரின் உடல்களும் ஓரிரு நாளில் சென்னை கொண்டு வரப்பட உள்ளன. ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரேம்குமார், சுஜாதா, கலா பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதவியாளர் கண்ணீர் பிரேம்குமார், சுஜாதா தம்பதிக்கு வீட்டு வேலைகளை செய்து கொடுக்கும் உதவியாளராக கண்ணதாசன் என்பவர் இருந்து வருகிறார். அவர் கூறியதாவது: பிரேம் குமார், சுஜாதா இருவரும் எங்களை வேலைக்காரர்களை போல் நடத்துவது இல்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போலவே நடத்தினார்கள். எங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் எறும்புக்கு கூட தீங்கு செய்யாதவர்கள். தினமும் எறும்புகளுக்கு அரிசி உணவளிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இப்படி உயிர்கள் மீது இறக்கம் கொண்டவர்கள் விபத்தில் மரணம் அடைந்திருப்பது நம்ப முடியாத ஒன்று என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE