5-வது வழித்தட பணி நடக்கும்போது பரங்கிமலைக்கு மெட்ரோ ரயில் போகாது: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் மாதவரம் - சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடப் பணிகள் நடக்கும்போது, ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும். அந்த காலகட்டத்தில் ஆலந்தூர் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, நீட்டிப்பு பணிகள் முடிந்த பிறகு, விமான நிலையம் - விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் என மொத்தம் 55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தூரத்துக்கு ரூ.63,246 கோடியில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 76.3 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்டப் பாதையாகவும், 42.6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையாகவும் அமைய உள்ளன. இந்த 3 வழித்தடங்களில் ஒன்று மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையான 47 கி.மீ. தூர வழித்தடம். இது, ஏற்கெனவே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் 2-வது வழித்தடமான சென்ட்ரல் - பரங்கிமலை பாதையை கடந்து செல்ல உள்ளது. அந்த பாதைக்கான பணிகள் நடக்க உள்ள நேரத்தில், பரங்கிமலை வரை மெட்ரோ ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்படும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சோழிங்க நல்லூர் 5-வது வழித்தடத்துக்கான பணிகள் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் நடைபெறும் காலகட்டத்தில், ரயில்களை அப்பகுதியில் இயக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், 2-வது வழித்தடத்தின் ரயில் நிறுத்தும் நிலையமாக பரங்கிமலைக்கு பதிலாக ஆலந்தூரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பரங்கிமலை வரை ரயில் செல்லாது என்பதால், பயணிகள் ஆலந்தூரில் இறங்கிக் கொள்ளலாம். 5-வது வழித்தடம் வரும் 2026-ம் ஆண்டு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரங்கிமலையில் இப்பணிகள் தொடங்கும்போது, இதுகுறித்து முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE