இந்தி திணிப்பு என கூறுவது அரசியல்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில மொழிக்கே முதல் இடம். அந்த வகையில் தமிழகத்தில் தாய்மொழியான தமிழுக்குத்தான் முதலிடம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. இந்திய அளவில் பெரும்பாலான மாநிலங்களில், ஏன் உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம்தான் பொது மொழியாக, இணைப்பு மொழியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்தியை 3-வது மொழியாக விரும்பி ஏற்கலாம், ஏற்காமலும் இருக்கலாம். அல்லது பிறமாநிலங்களில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்கலாம். இதில் கட்டாயப்படுத்துதல் என்பது இதுவரை இல்லை. நீதிமன்றங்களில் சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் நிலை இப்படி இருக்க, இந்தி திணிப்பு என்பதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. தற்போது, உள்ள அரசியல் சூழலில் தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது வாக்கு வங்கிக்காக, இந்தியைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள். இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE