திருப்பூர்: திருப்பூர் வருவாய் கோட்டத்தின் புதிய சார் ஆட்சியராக, ஸ்ருதன் ஜெய் நாராயணன் இன்று காலை பதவி ஏற்றார். இவர் நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஆவார்.
கடந்த 2019 -ம் ஆண்டு நடந்த குடிமைப்பணி (UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்றவர். மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி துணை ஆட்சியராக பணியில் இருந்தார்.
இந்நிலையில், திருப்பூர் சார் ஆட்சியராக அறிவிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து திருப்பூர் கோட்டாட்சியராக இருந்த பண்டரிநாதன், இன்று பொறுப்புகளை ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து பொறுப்பேற்ற பின் அவர் கூறும்போது, ''எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும். தந்தை திரைத்துறையை சேர்ந்தவராக இருந்தாலும், எனது சிறுவயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். பெற்றோருக்கு நன்றி'' என்று தெரிவித்தார்.