தமிழகத்தில் இலவச சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீண் செலவு: சிஏஜி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது தேவையை அறிந்துகொள்ளாமல் வழங்கப்படும் சீருடைகளால் தமிழக அரசுக்கு ரூ.4.13 கோடி தேவையற்ற செலவினம் ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-மார்ச் வரையிலான நிதியாண்டிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 4 சீருடைகள் இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சீருடைகள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 47.89 லட்சம். இவர்களில் 38.41 லட்சம் பேர் (80 விழுக்காடு) மதிய உணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே இலவச சீருடைக்கு தகுதி பெற்றுள்ளனர். 2018-21 ஆண்டு இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு சராசரியாக ரூ.409.63 கோடி செலவினம் ஏற்படுகிறது.

2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 4 மாவட்டங்களில் உள்ள 1425 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடைப் பயன்பாடு குறித்த தணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இதில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது தேவையை அறிந்துகொள்ளாமல் வழங்கப்படும் சீருடைகளால் தமிழக அரசுக்கு ரூ.4.13 கோடி தேவையற்ற செலவினம் ஏற்பட்டுள்ளது. மேலும், சீருடையை ஓரளவு மட்டுமே பயண்படுத்திய மாணவர்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு திட்ட வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யலாம் மற்றும் இலவச சீருடைகளுக்கு குறிப்பிட்ட சீருடை கேட்புக் கோரிக்கைகள் வழங்கும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடைகளை வழங்கலாம். வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் மட்டுமே இலவச சீருடை அணிய அனுமதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கலாம் என்று தணிக்கைத்துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE